3/15/2006

27. பாரோவின் முன்

மோசஸும் ஆரோனும் பாரோவிடம் சென்று எபிரேயர்கள் தங்கள் கடவுளை வணங்க மூன்று நாட்கள் அவர்களை விடுவித்துவிடக் கேட்டனர். பாரோ,"நீங்கள் சொல்லும் இந்தக் கடவுளை எனக்குத் தெரியாது" எனக் கூறி எபிரேயர்களின் வேலைச் சுமையை அதிகரித்து அவர்களை மேலும் கொடுமை படுத்தினான்.

எபிரேயர்களுக்கு செங்கல் செய்ய கொடுக்கப்படும் நார்கீற்றுக்களை அவர்களே சேகரித்து செங்கல் செய்யச் சொல்லப்பட்டது. செங்கலின் அளவும் குறையக்கூடாது.

அடிமைகளான எபிரேயர்களுக்கு வேலைப் பழுவும் கொடுமையும் அதிகரித்தது. அவர்கள் மோயீசன் மேல் கோபம் கொள்ளத்துவங்கினர்.

கடவுள் மோயீசனை திரும்ப பாரோவிடம் போய் தான் காண்பித்த அடையாளங்களை காண்பிக்கச் சொன்னார்.

பாரோவிடம் ஆரோனும் மோயீசனும் செல்ல அவன்," நீங்கள் கடவுளிடமிருந்து வருகிறீர்களென்பதற்கு என்ன ஆதாரம்?" என்றான். ஆரோன் தன் கைத்தடியை கீழே போட அது பாம்பாகியது.

பாரோ தன் அவையிலிருந்த மந்திரவாதம் மற்றும் மாயங்கள் செய்பவர்களை அழைத்தான் அவர்களும் தங்கள் தடிகளை பாம்பாக மாற்றிக் காட்டினர். ஆரோனின் பாம்பு எகிப்தியரின் பாம்பை விழுங்கியது. பாரோ இதனாலும் மனம் மாறவில்லை.

அடுத்தநாள் நைல் நதிக்கரையில் பாரோவை சந்தித்தனர். ஆரோன் தன் கைத்தடியை நைல்மீது நீட்ட நைல் நதியில் நீர் இரத்தமாக மாறியது. எகிப்திலிருந்த அத்தனை நீரும் இரத்தமாய் மாறியது. தன் மந்திரக்காரர்களும் நீரை இரத்தமாக மாற்றியதைக் கண்ட பாரோ எபிரேயர்களை அனுப்ப மறுத்தான்.

இன்னுமொரு வாரம் கழித்து பார்ரோவிடம் சென்றனர். இம்முறை ஆரோன் தன் கைத்தடியை நீட்ட ஆயிரக்கணக்கில் தவளைகள் எகிப்தில் புகுந்தன.

எங்கு பார்த்தாலும் தவளைகள், அரண்மனை முதல் அடுப்படி வரை. பாரோவின் ஆட்களாலும் இதேபோல் தவளைகளை வரவழைக்க முடிந்தது. பாரோ எரிச்சலடைந்து மோயீசனிடம் "நாளைக்கே இந்த தவளைகளை அழித்தால் உன் மக்களை வழிபாட்டுக்கு அழைத்துச் செல்லலாம்" என்றான்.

அதுபோல அடுத்தநாள் எல்லா தவளைகளும், நதிகளில் வாழ்பவை தவிர, இறந்தன. பாரோ தன் வாக்கை மறந்து எபிரேயர்களை அனுப்ப மறுத்தான்.

மீண்டும் ஆரோன் தடியை நீட்ட சிறு பூச்சிகள் எகிப்தை ஆட்கொண்டன. இதை பாரோவின் ஆட்களால் செய்யமுடியவில்லை 'இது கடவுளின் செயல்தான்' என்றனர். இருப்பினும் பாரோ மனம் மாறவில்லை.

எபிரேயர்கள் வசித்துவந்த கோஷன் நகரில் மட்டும் எந்த பாதிப்புமில்லை.

"உன் மக்களை கோஷனிலேயே கடவுளுக்கு பலி செய்யச் சொல்" என்றான் பாரோ. எபிரேயர்கள் ஆட்டை பலி கொடுப்பது வழக்கம், எகிப்தியர்களோ ஆடு மாட்டை புனிதமாக கருதினர். "நாங்கள் ஆட்டை பலியிட்டால் எகிப்தியர்கள் கோபத்திற்கு ஆளாவோம் எனவே காட்டுக்குள் சென்று பலியிட வேண்டியுள்ளது" என்றார் மோயீசன்.

மீண்டும் சரி என்று சொல்லி பூச்சிகள் போனதும் எபிரேயர்களை அனுப்ப மறுத்தான் பாரோ.

அடுத்த அடையாளமாக எகிப்தியரின் கால்நடைகள் அனைத்தும் கொல்லப்பட்டன, எபிரேயர்களுக்கோ ஒன்றுமாகவில்லை.

அடுத்து வலிகொடுக்கும் கொப்பளங்கள் எகிப்தியருக்கு வந்தன. அதன்பின் பனிக் கட்டிகள் விழும் கொடுமையான ஆலங்கட்டி மழை பெய்தது. பாரோ மோயீசனிடம்,"ஆண்களை மட்டும் அழைத்துச் செல்" என்றான் மோயீசன்,"எல்லோரும் எல்லாமும்" என்றார்.

பெரும் வெட்டுக்கிளிகளின் கூட்டம் வந்து எகிப்திலுள்ள பயிர்களை அழித்தது. இன்னும் பாரோ மனமிரங்கவில்லை."இனிமேல் என்னை வந்து பார்க்கதே" என்று மோயீசனை கடிந்த்தான்.

மோயீசனும்,"நான் வந்து உம்மை இனி பார்க்கப்போவதில்லை ஆனால் கடவுள் எகிப்தியருக்கு இன்னொரு கொடுமையை நிகழ்த்துவார். அப்போது என் மக்களை அழைத்துச் செல்லுமாறு என்னை கெஞ்சுவீர்கள்" என்றார்.

2 Comments:

At 9:38 AM, Blogger G.Ragavan said...

ம்ம்ம்ம்.....அடிமைச் சுகம் கண்ட பிறகு அதை எளிதில் விட மனம் விரும்பாது. அதுதான் ராம்சிஸ்சிடம் கண்டது.

சிறில் எனக்கு ஒரு ஐயம். ராம்சிஸை கடலில் மூழ்கடித்ததாக வருகிறது. ஆனால் ராம்சிஸின் உடல் என்று ஒன்று இன்று காட்சி செய்யப்படுகிறது. இது வேறு ராம்சிஸா? ஏனென்றால் கடலுள் போனவர் போனவரே என்றுதான் கேள்விப் பட்டிருக்கிறேன். கொஞ்சம் விளக்குங்களேன்.

 
At 12:48 PM, Blogger சிறில் அலெக்ஸ் said...

ராகவன்,
10 Commandments பைபிளை மட்டும் மையமாக வைத்து எடுக்கப்படவில்லை மற்ற சமகால வரலாற்றிலிருந்தும் எடுக்கப்பட்ட குறிப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளது படத்தில்.

பைபிளில் பாரோவின் படைகல் கொல்லப்பட்டதாக இருக்குது ஆனா பாரோ இறந்ததாக சொல்லப்படவில்லை என நினைக்கிறேன். அடுத்த கதைகளில் இதைப் பற்றி ஏதாவது பைபிளில் படித்தால் சொல்லுகிறேன்.

ராம்ரிஸ் என்கிற பெயர்கூட பைபிளில் சொல்லப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. I am not sure. பின்னால் சொல்லப்பட்டிருக்கலாம்.

 

Post a Comment

<< Home