2/16/2006

8. ஆகார் மற்றும் இஸ்மயேல்


எகிப்திலிருந்து திரும்பும்போது ஆபிரகாம் சாரவிற்கு உதவியாக ஆகார் என்கிற பணிப்பெண்ணை அழைத்து வந்தார்.

ஆபிரகாம் குழந்தைப் பேறு இல்லாதிருந்தார், ஆனால் கடவுள் ஆபிரகாமின் தலைமுறையை வானகத்தின் நட்சத்திரங்கள் போல எண்ணமுடியாத படி பெருக்குவேன் என்று வாக்களித்திருந்தார்.

மகப்பேறில்லாததை எண்ணி சாரா ஆபிரகாமிடம் ஆகாரை மணமுடித்து அவள் மூலமாய் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டினாள். பணிப்பெண் மூலம் குழந்தை பேறு அடைவது அப்போது ஒரு வழக்கம்.

ஆகாருக்கும் அபிரகாமுக்கும் திருமணம் நடந்தபின் ஆகார் கருத்தரித்தாள்.

தன் கர்ப்பத்தின் பேரில் ஆகார் கர்வம் கொண்டவளானாள், சாராவை இழிவாக நினைத்தாள். சாரா இதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ஆகாரை கொடுமைப் படுத்த, ஆகார் கொடுமை தாங்காமல் ஆபிரகாமின் வீட்டை விட்டு ஓடிப்போனாள்.

கர்ப்பிணியான ஆகார் பாலைவனத்தில் திரிந்து கொண்டிருக்கும்போது ஒரு கிணற்றடியில் கடவுளின் தூதன் அவளுக்குத்தோன்றி,

"சாராவின் பணிப்பெண் ஆகார்.. எங்கிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? உன் தலைவியிடம் திரும்பிச் சென்று அவளுக்குப் பணிந்து நட. உன் வழி மரபினரையும் பல மடங்குப் பெருகச் செய்வேன். நீ ஒரு மகனை பெற்றெடுப்பாய் அவனுக்கு 'இஸ்மயேல்' எனப் பெயரிடுவாய்."
என்றார். இஸ்மயேல் என்றால் 'கடவுள் செவிகொடுத்தார்' என்பது அர்த்தம்.

ஆகார் திரும்பி ஆபிரகாமின் கூடாரத்திற்கே போய்ச் சேர்ந்தாள். இஸ்மயேல் பிறந்தபோது ஆபிரகாமுக்கு வயது 86.

1 Comments:

At 1:07 PM, Blogger பரஞ்சோதி said...

பெண்கள் என்றாலே பொறாமையும், கொடுமைப்படுத்தலும் கூட பிறந்த ஒன்றா?

 

Post a Comment

<< Home